திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.105 திருக்கலிக்காமூர் பண் - பழம்பஞ்சுரம் |
மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினையானசிந்தும் இறைவன் னருளாமே.
|
1 |
மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும் மிருக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத் தானுமென்பர் அதுவுஞ் சரதமே.
|
2 |
தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
|
3 |
குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊரியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.
|
4 |
வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.
|
5 |
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லேதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.
|
6 |
கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.
|
7 |
ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.
|
8 |
அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.
|
9 |
மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.
|
10 |
ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்டு
ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |